Monday, October 29, 2018

திருக்குரக்காவல் - குந்தளநாதர் கோவில்

தேவார பாடல் :
 மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே

மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி, தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல், கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய, குற்றங்கள் கெடும் என திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற திருத்தலம்.

ஊர்: திருக்குரக்காவல் (பழைய பெயர் திருக்குரக்குக்கா), வடவாஞ்சார், வைத்தீஸ்வரன் கோயில் அருகில்

மூலவர்: குந்தளேசுவரர்,குண்டலகர்னேஸ்வரர்

அம்பாள்: குந்தளநாயகி,குந்தளாம்பிகை

தீர்த்தம்: பழவாறு (கணபதி நதி)

தரிசனம் பெற்றவர்கள்: ஆஞ்சநேயர்

ஸ்தல வரலாறு : இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முறபட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது. இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.

ஆலய சிறப்புகள்: பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.

தரிசன பயன்கள்: சூரியன் மற்றும் சனியினால் வரும் தோஷம் உடையவர்கள் இந்த இறைவனையும் அனுமனையும் வழிபட்டால் தோஷம் நீங்கும்.

எப்படி செல்வது : வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

எங்கே தங்குவது: வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி

தரிசன நேரம் :6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


No comments:

Post a Comment