Monday, November 19, 2018

நெய்வணை-சொர்ணகடேஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.

நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து
செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர்.
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளும் சிவபெருமானே! திருநெல்வெண்ணெய் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச்

சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும் என திருஞானசம்பந்தரால் பாடபெற்ற திருக்கோயில்.

ஊர்: நெய்வணை (பழைய பெயர் திருநெல்வெணெய்)

மூலவர்: சொர்ணகடேஸ்வரர்,வெண்ணையப்பர்

அம்பாள்: நீலமலர்க்கண்ணம்மை

ஸ்தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: பெண்ணை நதி

வழிபட்டோர்கள் : சனகாதி முனிவர்கள் நால்வரும்

ஸ்தல வரலாறு : ஒரு காலத்தில் இவ்வூர் மக்கள் இறைவனை வழிபடாது நிந்தித்து வந்தனர். இதனால் சினம்கொண்ட தேவர்கள் பெரும்மழை இவ்வூரில் பெய்ய செய்தனர். நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி உடையும் நிலைக்கு வந்தபோது மக்கள் மிகவும் வருந்தினர். தங்கள் குற்றத்தை உணர்ந்து இறைவனை காத்து அருளுமாறு மனமார வேண்டினர். இறைவனும் மக்கள் மேல் கருணை கொண்டு ஒரு சிறுவன் வேடத்தில் இங்கு வந்து வீடுவீடாக சென்று நெல் மூட்டைகளை சேகரித்து நீர் நிலைகளில் அருகே அடுக்கி மக்களை காத்தார். தேவர்களும் மனமிரங்கி இயற்க்கை சீற்றத்தை நிறுத்தினர்.

ஆலய சிறப்புகள்: பொதுவாக ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றுவதை நாம் பார்த்து இருப்போம். அனால், இந்த ஆலய சிவனுக்கு வெண்ணை சாற்றும் முறை கடைபிடிக்கபடுகிறது.

ஞானசம்பந்தர் கால்களை தூக்கி நடனம் ஆடுவது போல் நால்வர் சன்னதியில் காணலாம். அம்பாள் காட்சி அருளியபோது பரவசத்தில் ஞானசம்பர் நடனம் ஆடியபடி பதிகம் பாடியதாக கூறப்படுகிறது.

தரிசன பயன்கள்: இக்கோயிலில், திங்கட்கிழமை தோறும் வெண்ணை சாற்றப்படுகிறது. அவ்வாறு இறைவன் லிங்க திருமேனியில் சாற்றப்பட்ட வெண்ணையை வீட்டிற்கு கொண்டு போய் விளக்கு ஏற்றினால் தீய சக்திகள் வீட்டை விட்டு அகலும் என்பது நம்பிக்கை.

எப்படி செல்வது : 
உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் எலவானாசூர் வந்து பின் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எறையூர் வந்தடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வடகுரும்பூர் வழியாக 4 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். குறுகிய சாலை, பகல் பொழுதில் செல்வது நல்லது.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





No comments:

Post a Comment