Thursday, November 22, 2018

ராஜேந்தரப்பட்டினம்-திருக்குமாரசாமி கோயில்- பஞ்ச புலியூர் ஸ்தலம்

தேவார பாடல் :
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதி வாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா என திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோயில்.

ஊர்:  ராஜேந்தரப்பட்டினம். தேவார பெயர் திருஎருக்கத்தம்புலியூர்.

மூலவர்: திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர், திருக்குமரேசர்)

அம்பாள்: வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி, நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள், அபீதகுஜநாயகி)

ஸ்தல விருட்சம்: வெள்ளெருக்கு

தீர்த்தம்: கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்

வழிபட்டோர்கள் : முருகப்பெருமான், வியாக்ரபாதர்

ஸ்தல வரலாறு : கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற் பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார்.

ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இராஜேந்த சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்தப் பட்டிணம் என்று இவ்வூர் மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு.

ஆலய சிறப்புகள்: நைமிசாரண்ய முனிவர்கள் வெள்ளெருக்கு மரங்களாக இத்தலத்தில் உரு எடுத்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது வழக்கம்.பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்த்தலங்களில் தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) திருப்பெரும்புலியூர் 4) ஓமாம்புலியூர்.

தரிசன பயன்கள்: பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.

எப்படி செல்வது :  விருத்தாசலம் - ஆண்டிமடம் - ஜெயங்கொண்டான் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது

எங்கே தங்குவது: விருத்தாசலம்

தரிசன நேரம் :.தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





1 comment: