Thursday, December 13, 2018

திருவாஞ்சியம்-வாஞ்சிநாத சுவாமி கோயில்

தேவார பாடல் :
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- 
உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், 
புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் 
அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான்தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை - அப்பர் பாடல். மேலும் திருஞானசம்பந்தரும் சுந்தரரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: திருவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம். பழைய பெயர் -ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சியம்பதி, சந்தனவனம், ஜாந்தாரண்யம், பூகைலாசம்

மூலவர்: வாஞ்சி நாதேசுவரர், வாஞ்சிலிங்கேசுவரர்

அம்பாள்: மங்கள நாயகி, வாழவந்த நாயகி

ஸ்தல விருட்சம்: சந்தனம்

தீர்த்தம்: குப்த கங்கை, இமய தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மஹாவிஷ்ணு

ஸ்தல வரலாறு : 
தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.

யமதர்மராஜா தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக எமனை நியமித்தார். எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும்.

குப்தகங்கை தீர்த்தம்-மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

ஆலய சிறப்புகள்: 
1. காசிக்கு சமமான 6 ஸ்தலங்களில் திருவாஞ்சியமும் ஒன்று. மற்றவை திருவையாறு, திருவெண்காடு,திருவிடைமருதூர், திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும்.

2. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது தப்பிப் பிழைத்த காசியைப் போலவே இதுவும் ஒன்று. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும்.

3. யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது.

4. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநிதிக்கு அடுத்து ராகு-கேது சந்நிதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

5.இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

6.  கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

தரிசன பயன்கள்: 
மரணபயம், மனக்கிலேசம், பைரவ உபாதை  உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை.

ராகு , கேது பரிகார ஸ்தலம், திருமண தடை நீங்கும் . மேலும் இத்தலத்தில் ஆயுஷ் ஹோமம் செய்துகொண்டால் ஆயுள் விருத்தி உண்டு என கூறப்படுகிறது.

மஹாலக்ஷ்மி மற்றும் மகிஷாசுரமர்தினியின் சந்நிதிகளும் இங்குள்ளன. சிம்ம வாகனத்துடன் நின்ற நிலையில் எட்டு கைகளுடன் காட்சி தரும் மகிஷாசுரமர்தினியை இராகு காலத்தில் 108 தாமரை மலர்களால் அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

எப்படி செல்வது : 
1) திருவாரூர் - வடக்கண்டம் -மங்கள் அய்யம்பேட்டை - பருத்தியூர் - திருவாஞ்சியம்  17 கிமீ.
2) மயிலாடுதுறை - பேரளம் - கூத்தனூர் -திருக்கண்டீஸ்வரம் - நன்னிலம் -திருவாஞ்சியம் 36 கிமீ
3) கும்பகோணம் - நாச்சியார் கோயில் - மதூர் - அச்சுதமங்கலம்  அரசு பள்ளிக்கு முன் வலது பக்கம் தெற்கே  பிரியும் சாலையில் இரண்டு கிமீ -திருவாஞ்சியம்  - 28 கிமீ

எங்கே தங்குவது: 
திருவாரூர், கும்பகோணம் அல்லது

எங்கே தங்குவது: கும்பகோணம், திருவாரூர் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.





No comments:

Post a Comment