Tuesday, December 4, 2018

சிதலப்பதி - மதிமுக்தீஸ்வரர் கோயில் - இராமர் சிரார்த்தம் செய்த ஸ்தலம்

தேவார பாடல் :
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே, 
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம் கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி, வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய
திருத்திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம்

கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும் என இரண்டாம் திருமுறையில் ஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: சிதலப்பதி, திருவாரூர் மாவட்டம், தேவார பெயர் திருத்திலதைப்பதி

மூலவர்: முக்தீஸ்வரர்

அம்பாள்: பொற்கொடியம்மை

ஸ்தல விருட்சம்:மந்தாரை

தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு

வழிபட்டோர்கள் : 
சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர்

ஸ்தல வரலாறு : 
இராமர் தன்  தந்தை தசரதனுக்கு பல  ஸ்தலங்களில் தர்ப்பணம் செய்கிறார். எனினும், அவர் அளித்த  பிண்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் புழு பூத்து   பலனில்லாமல் போனது. தந்தைக்கு முக்தி கிடைக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த ஸ்தலத்தில் நான்கு பிண்டம் படைக்கிறார். சிவனின் அருளால் அந்த பிண்டங்கள் நான்கு லிங்கமாக மாறியது. அதனால் தசரத மஹாராஜாவிற்கு முக்தி கிடைத்தது. எனவே மூலவர் முக்தீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார். ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையுலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம்.

ஆலய சிறப்புகள்: இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சரத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது.

மற்றொரு சிறப்பு கோவில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

தரிசன பயன்கள்: செல்வ செழிப்பு, தர்ப்பணம் செய்தால் பிதுர்களுக்கு நல்லது.

எப்படி செல்வது : மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டதில் இருந்து சுமார் 2 கி.மி. கும்பகோணத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார் கோயில் - திருவீழிமிழிலை - கூத்தனுர் வழியாக. புகழ் பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில் 2 கிமீ தூரத்தில் உள்ளது.

எங்கே தங்குவது: கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் பகல் 12-45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



ஆதி விநாயகர் ஆலயம் 

No comments:

Post a Comment