Friday, December 7, 2018

திருக்கொண்டீஸ்வரம் - பசுபதீஸ்வரர் கோயில்

தேவார பாடல் :
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே!” அஞ்சல்!” என்னாய்

திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய், நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக என அப்பர் நான்காம் திருமுறையில் பாடியுள்ளார். மேலும் ஒரு பதிகம் ஐந்தாம் திருமுறையில் உள்ளது.

ஊர்: திருக்கொண்டீச்சரம், திருவாரூர் மாவட்டம்

மூலவர்: பசுபதீஸ்வரர், பசுபதீசுவரர், பசுபதி நாதர்

அம்பாள்: சாந்த நாயகி

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: க்ஷீர புஷ்கரணி

வழிபட்டோர்கள் : பார்வதி தேவி காமதேனு வடிவில் வழிபட்ட ஸ்தலம், குரு பகவான்.

ஸ்தல வரலாறு : ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.

ஆலய சிறப்புகள்: குரு பகவான் மற்றும் அவர் ஆட்சி செய்யும் வியாழக்கிழமையும்  வழிபட்ட தலம் . அதனால் ஒவ்வொரு கார்த்திகை வியாழக்கிழமையும் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.

தரிசன பயன்கள்: வியாழக்கிழமை பிறந்தவர்கள் ஜாதகத்தில் குரு வியாழன் பாதிப்பு உள்ளவர்கள் வியாழக்கிழமை இத்தலத்தில் புனித நீராடினால் கிரக கோளாறுகள் நீங்கும்.

எப்படி செல்வது : 
1) திருவாரூர் - ஆண்டிப்பந்தல் -திருக்கண்டீஸ்வரம் 15 கிமீ.
2) மயிலாடுதுறை - பேரளம் - கூத்தனூர் -திருக்கண்டீஸ்வரம் 30 கிமீ
3) கும்பகோணம் - நாச்சியார் கோயில் - நன்னிலம் - திருக்கண்டீஸ்வரம் 32 கிமீ

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.






No comments:

Post a Comment