Monday, February 18, 2019

எலுமியன்கோட்டூர்-தெய்வநாயகேசுவரர் கோயில்

தேவார பாடல் :
மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ! என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

ஊர்: இலம்பையங்கோட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம்

மூலவர்: அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்

அம்பாள்: கனக குஜாம்பிகை, தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை

ஸ்தல விருட்சம்:மரமல்லிகை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்

வழிபட்டோர்கள் : ரம்பை

ஸ்தல வரலாறு : திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று கெயர் பெற்றார்.

மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.

ஆலய சிறப்புகள்: ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பினபு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் எறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது.

தரிசன பயன்கள்: மன இறுக்கம் உள்ளோர் திங்களன்றும் வியாழனன்றும் தெய்வநாயகேஸ்வரரையும் யோகதட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட இழந்த வலிமையைப் பெறுவர் என்பது தொன்நம்பிக்கை. சர்ம சம்பந்த நோய்களுக்கும் பரிகார தலமாக உள்ளது.

குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

எப்படி செல்வது : திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.

எங்கே தங்குவது: சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை




No comments:

Post a Comment