Wednesday, January 16, 2019

ஒழிந்தியாம்பட்டு-அரசலீசுவரர் கோயில்

தேவார பாடல் :
பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல் 
                                                         கங்கை, 
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

செஞ்சடையில், இசைபாடும் வண்டுகள் சென்று
சூழும் கொன்றை மலர், பால்போலும் பிறைமதி, பாய்ந்து வரும்
புனலை உடைய கங்கை, வெண் காந்தள், வில்வ மாலை, ஊமத்தம்
பூ ஆகியன குலவி விளங்க, கழுத்தில் தசை உலர்ந்த வெண்டலை
மாலை மருவ, இடையில் புலித் தோலை உடுத்தித் தோள்மேல்
பாம்பைச்சுற்றிக் கொண்டுள்ள அடிகளாகிய சிவபிரானுக்கு உகந்த
இடம் அரசிலியேயாகும் என திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்

ஊர்: ஒழிந்தியாம்பட்டு, தேவார பெயர் திருஅரசிலி, விழுப்புரம் மாவட்டம்.

மூலவர்: அரசிலிநாதர் (அரசலீசுவரர்).

அம்பாள்: பெரியநாயகி

ஸ்தல விருட்சம்: அரசு

தீர்த்தம்: அரசரடித் தீர்த்தம் (வாமன தீர்த்தம்)

வழிபட்டோர்கள் : வாமதேவ முனிவர்

ஸ்தல வரலாறு : வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார்.இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.

வாமதேவ முனிவருக்குப் பின பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு போயிற்று. சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொறு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். ஒரு சமயம், மன்னரின் பணியாட்கள் நந்தவனம் சென்று மலர்களை பறிப்பதற்கு முன்னமே யாரோ பறித்து சென்றுவிடுகின்றனர். தொடர்ந்து இது போல் நாட்கள் நடந்தன.

மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் அதøø விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்க பாண்த்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.

வாமதேவ முனிவர் காலத்திற்கு பிறகு ஒழிந்து மீண்டும் சத்தியவிரதன் காலத்தில் சிவலிங்கம் அகப்பட்டது. ஒழிந்து அகப்பட்டது என்பதே காலப்போக்கில் ஒழிந்தியாம்பட்டு என மருவி இந்த ஊரின் பெயராக நிலைபெற்றது.

ஆலய சிறப்புகள்: சுயம்பு லிங்கமூர்த்தி. கருவறையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.

தரிசன பயன்கள்: பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா நலனையும் அடைவார்கள்.

எப்படி செல்வது : பாண்டிச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில்  ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது

எங்கே தங்குவது: புதுச்சேரி 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 8-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை





No comments:

Post a Comment