Monday, January 7, 2019

திருமால்பூர்-மணிகண்டீசுவரர் கோயில்

தேவார பாடல் :
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர் 
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார் என அப்பரால் பாடல்பெற்றது.

ஊர்: திருமால்பூர், புராண பெயர் ஹரிசக்கரபும், திருமாற்பேறு, வேலூர் மாவட்டம்.

மூலவர்: மணிகண்டீஸ்வரர்

அம்பாள்: அஞ்சனாட்சி

ஸ்தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: சக்கர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : மஹாவிஷ்ணு

ஸ்தல வரலாறு : ஜலந்திரன் எனும் அரக்கனை கொல்ல சிவபெருமான் சக்ராயுதம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழந்து போனது. அதனால் சிவபெருமானிடம் சக்ராயுதம் பெறுவதற்காக திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசை செய்துவந்தார்.

ஒரு நாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்று சிவபெருமானின் அருளால் மறைந்தது. தனது பூசையை நிறைவு செய்வதற்காக திருமால் தனது கண்களில் ஒன்றை தாமரையாக மாற்றி பூசித்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலிற்கு பார்வை வழங்கியதுடன், சக்ராயுதத்தினையும் அளித்தார்.

ஆலய சிறப்புகள்: மூலவர் தீண்டாத் திருமேனி.ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட, தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் ஒரு இலிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்ற பழைய பாலாறு இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது. மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளதால், அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு திருப்பதிகங்களும், திருநாவக்கரசர் அருளிய நான்கு திருப்பதிகங்களும் ஆக ஆறு தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்கு உரியன.

மூலவருக்கு நேரெதிரில் மஹாவிஷ்ணு தரிசனம் செய்வதுபோல் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

தரிசன பயன்கள்: பொதுவான நற்பயன்கள்

எப்படி செல்வது : காஞ்சிபுரம் நகரில் இருந்து 15 கி.மி. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது: காஞ்சிபுரம் 

தரிசன நேரம் :.காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.



No comments:

Post a Comment