Thursday, January 31, 2019

விருத்தாசலம் - பழமலைநாதர் கோயில்/காசிக்கு இணையான ஸ்தலம்

தேவார பாடல் :
திருஞானசம்பந்தர் 7 பதிகங்களும், சுந்தரர் 3 பதிகங்களும் மற்றும் அப்பர் 1 பதிகமும் பாட பெற்ற அற்புத தலம்.

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம் என திருஞானசம்பந்தர் பாடல் இறைவன் புகழ் பாடுகிறது.

ஊர்: விருத்தாசலம், கடலூர் மாவட்டம். தேவார பெயர் திருமுதுகுன்றம்.

மூலவர்: பழமலைநாதர், விருத்தாசலேசர்

அம்பாள்: பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை

ஸ்தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்: மணிமுத்தா நதி, அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்

வழிபட்டோர்கள் : உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்தினி.

ஸ்தல வரலாறு : ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.

இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

'விருத்த' என்றால் முதுமை என்றும் 'அசலம் ' என்றால் மலை என்றும் பொருள்படும். எனவே விருத்தாசலம் என்றால் பழமலை என்று கருத்தாகிறது.

ஆலய சிறப்புகள்: 

1. எல்லாம் ஐந்து - ஐந்து கோபுரம் , ஐந்து வெளிமண்டபம், ஐந்து உள்மண்டபம், ஐந்து - கொடிமரம், ஐந்து - நந்தி, ஐந்து - பிரகாரம், ஐந்து விநாயகர், ஐந்து மூர்த்தங்கள், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், ஐந்து பெயர் கொண்டது, ஐந்து முனிவர்கள் வழிபட்டது.

2. ஆகமக் கோவில்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

3. காசிக்கும் மேலான ஸ்தலம் -  இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும். காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும்.  இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது ஐதீகம்.

4. விநாயகர் படை வீடு - முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பதுபோல் விநாயகருக்கும் அறுபடை வீடுள்ளது. அதில் இந்த தலம் இரண்டாவது. ராஜகோபுரத்தையடுத்து இடப்பக்கமுள்ள ஆழத்து விநாயகர் சன்னதி காணலாம். மேலும் இத்தலத்து முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். ஊழி காலத்தில் உலகம் அழிந்தபோதும் இந்த கோயில் அழியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

5. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1008 சிறப்பான சிவன் கோயில்களில் 4 கோயில்கள் முக்கியமானவை - அதில் ஒன்று இந்த தலம்.

6. சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் - முருகப்பெருமான் உடனுறை வள்ளி தெய்வானை மேல் சக்கரங்கள் அமைந்துள்ளது சிறப்பு.

தரிசன பயன்கள்: வழிபட்டால் இம்மை பயன்களும், மறுமை பயன்களும் மன நிம்மதியும் அளிக்கும் அற்புத திருத்தலம். இங்குள்ள துர்கை அம்மனை வழிபட்டால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் ஐஸ்வரியம் கைகூடும்.

எப்படி செல்வது : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: விருத்தாசலம் 

தரிசன நேரம் :.6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.






No comments:

Post a Comment